×

மகனின் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு மூதாட்டி அடித்துக்கொலை: அம்பத்தூரில் நள்ளிரவு பயங்கரம்

அம்பத்தூர்: அம்பத்தூரில் நள்ளிரவில் மகனின் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு, கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பத்தூர் – அயப்பாக்கம் நெடுஞ்சாலை, டி.ஜி.அண்ணா நகரை சேர்ந்தவர் சரத் சந்திரன் (70). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி நிர்மலா (64). இவர்களுக்கு பிரிடா (36), பிரசன்னா (33) என்ற மகள்களும், சந்தோஷ்ராஜ் (30) என்ற மகனும் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகி படப்பை, ஒரத்தூர் பகுதியில் வசிக்கின்றனர். மகன் சந்தோஷ்ராஜ், தனது மனைவி பிரேமலதாவுடன் பெற்றோர் வீட்டின் அருகில் தனியாக வசிக்கிறார். கடந்த 5 நாட்களுக்கு முன் சரத் சந்திரன், மூத்த மகள் பிரிடாவை பார்க்க படப்பை சென்று விட்டார். நிர்மலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இவர், மகன் சந்தோஷ்ராஜிடன் பேசி விட்டு, வீட்டுக்கு இரவு 10.30 மணியளவில் தூங்கச்சென்றார். நேற்று காலை 7.45 மணியளவில் சந்தோஷ்ராஜின் வீட்டின் முன் பக்க கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அதன்பேரில், அவர்கள் பூட்டை உடைத்து கதவை திறந்து விட்டுள்ளார். பின்னர் வெளியே வந்த சந்தோஷ்ராஜ், தாய் நிர்மலாவை பார்க்க வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது வீட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது,  நிர்மலா நெற்றியில் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்து அலறி துடித்தார். தகவலறிந்து அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டது. அது,  வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அரை கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று ஒரு தனியார் கம்பெனி அருகே படுத்து கொண்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.  இதையடுத்து, போலீசார் நிர்மலா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலா அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்படவில்லை. பொருட்களும் திருடு போகவில்லை. இதனால் நகை, பணத்திற்காக கொலை நடக்கவில்லை என்பது தெரியவருகிறது. அப்படி என்றால், நிர்மலா எதற்காக கொலை செய்யப்பட்டார். இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதனிடையே, அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, ஒரு மர்ம நபர்  2.30 மணி அளவில் நிர்மலா வீட்டுக்குள் சென்றுவிட்டு, பின்னர் 3.30 மணிக்கு வெளியே வந்துள்ளார். மேலும், அவர் வரும்போது ஒரு கைப்பையை எடுத்துக்கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது. போலீசார் அவரது உருவத்தை வைத்து யார் என அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்….

The post மகனின் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு மூதாட்டி அடித்துக்கொலை: அம்பத்தூரில் நள்ளிரவு பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Ambattur ,
× RELATED அம்பத்தூரில் வாசனை திரவியங்கள்...