×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை: அங்காடி நிர்வாகம் தகவல்

அம்பத்தூர், ஜன.5: கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தை அமைக்கப்படும் என, அங்காடி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில், அங்காடி நிர்வாக சார்பில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு, 10 நாட்கள் வரை நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தை அங்காடி நிர்வாக சார்பில், கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் ‘ஏ’ சாலையில் உள்ள வாகன நிறுத்த இடத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக் கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து மற்றும் மண்பானை, வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பு சந்தையில் கடை வைப்பதற்கும், சரக்குகளை ஏற்றிக் கொண்டு மார்க்கெட்டில் நுழையும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பதற்கான ஏலம் கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக சார்பில் நடத்தப்படும் என அங்காடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அங்காடி நிர்வாக அதிகாரி கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு அங்காடி நிர்வாகம் சார்பில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்தை சீர்செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சந்தையில் எந்த ஒரு பிரச்னையும் வராமல் இருக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்க உள்ளோம். அந்த அதிகாரிகளிடம் சிறப்பு சந்தையில் கூடுதலாக யாராவது வசூல்செய்தாலும், வியாபாரிகள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு சந்தைக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பு சந்தையை அங்காடி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என வியாபாரிகள் கோருகின்றனர். வியாபாரிகளின் நலன்கருதி சிறப்பு சந்தையில் வெளி ஆட்களுக்கு ஏலம் விடுவதை ரத்து செய்துவிட்டு அங்காடி நிர்வாகம் பொறுப்பெடுத்து சிறப்பு சந்தை நடத்த உள்ளதை வியாபாரிகள் வரவேற்று உள்ளனர்.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை: அங்காடி நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pongal festival ,Ampathur ,Koyambedu ,Dinakaran ,
× RELATED திருமணமான 3 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால் வழக்கறிஞர் தற்கொலை