×

பெங்கால்மட்டம் பகுதியில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

மஞ்சூர்,செப்.8: பெங்கால்மட்டம் பகுதியில் அட்டகாசம் செய்யம் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பெங்கால்மட்டம். இப்பகுதியில் கடைகள் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கரடி ஒன்று பெங்கால்மட்டம் பகுதியில் நடமாடி வருகிறது.

அருகில் உள்ள சாம்ராஜ், பெங்கால், மாசிகண்டி, கோத்திபென், கேரிகண்டி பகுதிகளில் உள்ள கோயில்களில் புகுந்து தீபம் ஏற்ற வைத்திருக்கும் எண்ணையை குடித்து பூஜை பொருட்களை சேதப்படுத்தியும் செல்வது தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் சாம்ராஜ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரவு நேரத்தில் புகுந்த கரடி அங்கு சமையல் அறையில் இருந்த உணவு பொருட்களை தின்று பொருட்களையும் வாரியிரைத்து சென்றுள்ளது.

பெரும்பாலும் இரவு நேரங்களில் கரடி நடமாடுவதால் அவசர, அத்தியாவசிய தேவைகளுக்கு வீடுகளில் இருந்து வெளியேற முடியாத நிலைக்கு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதை தொடர்ந்து கரடியால் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படும் முன் அதை கூண்டு வைத்து பிடித்து தொலைதூர வனப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெங்கால்மட்டம் பகுதியில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Bengalmattam ,Manjoor ,Dinakaran ,
× RELATED மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு