×

ஜிஹெச்சை தரம் உயர்த்த வேண்டும்: அருப்புக்கோட்டை மக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு 27 டாக்டர்கள், 6 செவிலியர் கண்காணிப்பாளர்கள், 53 செவிலியர்கள், 36 ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள், கொரோன சிறப்பு பணிக்காக 34 செவிலியர்கள் என பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பொதுப்பிரிவு, டயலாசிஸ் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, போன்ற வசதிகள் உள்ளன.

தனியார் மருத்துவமனைக்கு நிகராக அணைத்து வசதிகளும் கொண்டது. இங்குள்ள பிரசவ வார்டில் மருத்துவர்களின் சிறப்பான கவனிப்பால் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு விரும்பி தேடி வருகின்றனர். அருகில் உள்ள சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்ட மக்களும், இங்குதான் பிரசவத்திற்கு வருகின்றனர். மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை மற்றும் சீரிய நிர்வாகம், செய்யப்பட்டு வருவதால் என்.ஏ.பி.ஹெச், காயகல்ப், தேசிய தரச்சான்று உட்பட பல விருதுகள் பெற்றுள்ளது. இந்த வருடம் தரச்சான்று பெற்று அரசு மூலம் ஒருபடுக்கைக்கு 10ஆயிரம் வீதம் 294 படுக்கைகளுக்கும், 3 வருடங்களுக்கான தொகையை பெற்றுள்ளது. மேலும் திருச்சுழி, நரிக்குடி, ரெட்டியபட்டி, பந்தல்குடி, காரியாபட்டி, சாத்தூர், விருதுநகர் உட்பட ஊர்களுக்கு இந்த மருத்துமனை மையமாக உள்ளது. அவசர சிகிச்சைக்கு எளிதாக வரக்கூடிய அளவில் சாலை வசதி, போக்குவரத்து இடையூறு இல்லாமல் உள்ளது. மாவட்டத்தில் இந்த மருத்துமனைக்கு மட்டும் தான் 294 படுக்கைகள் உள்ளன. மற்ற ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த வசதி இல்லை.

மேலும் மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக, டிஜிட்டல் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், உடல் முழு பரிசோதனை ஆய்வுக்கூடம் போன்ற வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் மட்டும் தான் மனநல சிகிச்சை பிரிவு, தொழுநோய் பிரிவு, யோகா நேச்சுரபதி பிரிவு உள்ளது. மேலும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவில் மட்டும்தான் கொரோனாவுக்கு மருந்து கொடுக்க அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட மருத்துவமனை மருத்துவ கல்லூரியுடன் இணைக்கப்பட்டு விட்டது. இதனால் அருப்புக்கோட்டையில் அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aruppukottai , Aruppukottai, Government Hospital
× RELATED இ-3 சாலை திட்ட பணியை துவக்க கோரி அருப்புக்கோட்டையில் கடையடைப்பு போராட்டம்