×

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை,செப்.27: தமிழ்நாடு அரசு விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை விவசாயிகள் சாகுபடி செய்யும் விதைகளை பிற ரக கலவன் பரிசோதனை செய்து தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விதை பரிசோதனையில் பிற ரக கலவன் பரிசோதனை ஏன்? நல் வித்தே நல் விளைச்சலுக்கு ஆதாரம். விதையே விவசாயத்தின் மூலதனம் என்பதற்கு ஏற்ப விதைப்பு செய்யப்படும் விதைகள் தரமான விதைகளாக இருக்க வேண்டும். ஒரே இரக விதைகள் ஒரே சமயத்தில் வளர்ச்சியடைந்த பூத்து பழுதின்றி அதிக மகசூல் கொடுக்கிறது. விதைப்பிற்கு பயன்படுத்தப்படும் விதைகளில் பிற இரகங்களின் கலப்பு குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேல் இருந்தால் அடுத்த பருவத்தில் பயன்படுத்தும்போது பூக்கும் பருவம், பயிர்களின் உயரம், அறுவடை காலம் ஆகியவை மாறுபட்டு இருக்கும். பிற ரகம் கலந்த விதைகளை விதைப்பதால் நோய் தடுப்பு, கலவன் செலவு அதிகமாவதுடன் விதையின் தரம் குறைகிறது மற்றும் நிகர மகசூலும் குறைகிறது.

ஒரே ரக விதைகள் விளைவதற்கு முதலானதாகும். இவ்வாறு முதன்மையான இனம் வகிக்கும் விதைகள் பிற ரக விதைகள் கலந்து இருத்தல் விதைகளின் பாரம்பரிய சுத்தம் பாதிக்கப்படுகின்றது. அரிசி அல்லது உறைபொருளின் தரமும் குறைந்து விடுகிறது. விளைச்சல்கள் பாதிக்கப்படும். ஆகையால் பிற ரக விதைகள் கலப்பு தடுக்க வேண்டும். பிற ரக விதைகளை பார்த்து பிரித்து அகற்றி பயிரின் மகசூலையும் தரத்தையும் அதிகரிக்க வேண்டும். விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைக்குவியலில் பிற ரக விதைகள் கலந்துள்ளனவா என்பதை நுண்ணோக்கி மூலம் கண்காணித்து ரகத்தின் குணநலன்களை கருத்தில் கொண்டு பிரித்தறியப்படுகிறது. உதரணமாக நெல்லை பொருத்தவரை சான்று விதையானால் 0.2 சதத்திலும் ஆதார விதைகளில் அதிகபட்சமாக 0.05 சதத்துக்குள்ளும் பிற ரக விதைகள் இருக்கலாம் மக்காச்சோளம், தட்டைப்பயிறு, கொள்ளு, பட்டாணி, கொண்டைக்கடலை, ஆமணக்கு ஆகிய பயிர்களுக்கு ஆதார விதைகளில் 5எண்கள், கிலோவிற்கும், சான்று விதைகளில் 10எண்கள், கிலோவிற்கும் மற்றும் சோளம், துவரை, உளுந்து, பாசிப்பயறு, எள், வெண்டை, கீரை, கொத்தவரை. ஆகிய பயிர்களுக்கு ஆதார விதைகளில் 10 எண்கள், கிலோவிற்கும் சான்று விதைகளில் 10 எண்கள், கிலோவிற்கும் பிற ரக கலப்பு மிகாமல் இருக்க வேண்டும்.

எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தங்கள் விதைக்குவியலில் இருந்து விதைமாதிரிகளை விதைப்பரிசோதனை நிலையத்தில் ரூ.80 ஆய்வு கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம் குவியல் எண் ஆகியவை குறித்த விபரசீட்டுடன் நெல் விதை 400 கிராம், மக்காச்சோளம் பயறு வகைகள் 1 கிலோ, எள் 70 கிராம் ஆகிய அளவில் விதைமாதிரி எடுத்து தங்களது முழு முகவரியுடன் கூடிய கடிதத்துடன் ராமலிங்கம் தெரு திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622002 என்ற முகவரிக்கு அனுப்பி விதையின் பிற இரக கலவன் மற்றும் முளைப்புத்திறன் அறிந்து தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமாறு மூத்த வேளாண்மை அலுவலர் சுமித்ராதேவி மற்றும் வேளாண்மை அலுவலர் செல்வம் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

The post புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Pudukottai ,Tamil Nadu Government Seed Certification and Biomass Certification Department ,
× RELATED சுற்றுப்புறங்களை பசுமையாக மாற்றிட பொதுமக்கள் மரக்கன்றுகள் நட வேண்டும்