×

ரங்கா.. ரங்கா கோஷம் விண்ணதிர. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர்

திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சித்திரை தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ரங்கா, ரங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாதருக்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள்் நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான விழாவாக சித்திரை தேர் திருவிழா கருதப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை வெள்ளி, தங்க குதிரை வாகனம், பல்லக்கு, கற்பக விருட்சம், சிம்மம், யாழி, இரட்டை பிரபை, சேஷ, ஹனுமந்த, தங்க ஹம்ச வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சித்திரை வீதிகளில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் புறப்பாடு நடந்து வருகிறது. கடந்த 28ம் தேதி தங்க கருட சேவையும், நேற்று முன்தினம் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினர். 6 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரங்கா, ரங்கா கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.  ஸ்ரீரங்கத்துக்கு விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து, நாளை திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், 5ம் தேதி ஆளும்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Ranga ,festival ,devotees ,Srirangam Ranganathar ,Chirakkalam ,
× RELATED ஆம்பூர் அருகே கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்