தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டதால், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொற்றின் தீவிரம் அதிவேகமாக இருப்பதால், நேற்று முதல் வரும் 20ம் தேதி வரை, தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. தர்மபுரி மாவட்டத்தில், அந்த உத்தரவின்படி அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களிலும் அதிகபட்சமாக 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.ரயில், வாடகை கார்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிக்க வேண்டும். தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் மளிகை பலசரக்கு மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி, மதியம் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது. ஜவுளிக்கடை, நகைக்கடை, ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இதர கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. மருந்து கடை, பால் வினியோகம், பத்திரிகைகள் விற்பனை போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் எந்த தடையுமின்றி செயல்பட்டது.அனைத்து உணவங்களிலும் பார்சல் மட்டும் அனுமதிக்கப்பட்டது. தேனீர் கடைகள் 12 மணிவரை மட்டுமே செயல்பட்டது. சினிமா தியேட்டர்கள், மீன் மார்க்கெட், கோழி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படவில்லை. புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்ததால், தர்மபுரி நான்கு ரோடு, கடைவீதி, சின்னசாமி தெரு, ஆறுமுக ஆசாரிதெரு, முகமது அலிகிளப்ரோடு, பேருந்துநிலையங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.நெசவாளர் காலனி அருகே அரசு பட்டுச்சேலை விற்பனை அங்காடி திறக்கப்பட்டிருந்தது. பின்னர் மதியம் மூடப்பட்டது. நல்லம்பள்ளியில் சில கடைகள் திறந்திருந்ததாக தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்பின் கடைகள் அடைக்கப்பட்டன. தர்மபுரி நான்கு ரோட்டில் ஒருவாகனம் செல்லும் வகையில் வழி விட்டு, நான்கு திசையிலும் பேரிகாடு வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்….
The post புதிய கட்டுப்பாடுகள் அமல் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு-வெறிச்சோடிய சாலைகள் appeared first on Dinakaran.