*ஒடுகத்தூர் கிராம மக்கள் பீதி அணைக்கட்டு : வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வனச்சரகத்திற்குபட்ட பகுதியில் கருத்தமலை காப்புக்காடு உள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் வழியாக காட்டு யானைகள் வந்து, மலையடிவாரம் அருகே உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருக்கும் வாழை, நெல், கரும்பு, மா உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வந்தன. வனத்துறையினர் நடவடிக்கை காணரமாக யானைகள் வெளியிடங்களுக்கு விரட்டப்பட்டது. அதன்பிறகு யானைகள் நடமாட்டம் இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குருவராஜபாளையம் அருகே உள்ள காட்டுக்கோயிலுக்கு செல்லும்பாதையில் ஒற்றை தந்தம் உடைய ஒரு யானை வந்துகொண்டிருந்தது. இதைக்கண்ட கிராம மக்கள் பீதியடைந்து தப்பி ஓடினர். இதையறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இளைஞர்கள் சிலர் சென்று யானையை விரட்ட முயன்றனர். இருப்பினும் ஒற்றை யானை, நீண்டநேரம் அங்கேயே இருந்தது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு வந்து பார்வையிட்டனர். இருப்பினும் நேற்று காலை வரை யானை நடமாட்டம் இல்லை. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘சாணாங்குப்பம் காப்புக்காடு பகுதியில் வழிதவறி ஒற்றை தந்தம் யானை ஊருக்குள் வர முயன்றுள்ளது. கிராம மக்கள் விரட்டியதால் யானை திரும்பிச்சென்றுவிட்டது. இருப்பினும் யானை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம். இந்த யானை வழிதவறி இப்பகுதிக்குள் வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்தது’ என தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு யானை ஊருக்குள் வர முயன்றதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்….
The post பல ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை தந்த யானை நடமாட்டம் appeared first on Dinakaran.