×

பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பெண் கவுன்சிலர் மீண்டும் பொறுப்பேற்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம், நவ.26: போலி சாதி சான்றிதழ் வழங்கியதாக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டு கவுன்சிலராக பணியாற்ற மீண்டும் ஷாலினி வேலு நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இதில், 27வது வார்டு கவுன்சிலராக ஷாலினி வேலுவை, கடந்த 2 ஆண்டுகளான செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கவுன்சிலர் ஷாலினி வேலு, சாதி சான்றிதழை போலியாக சமர்ப்பித்ததாக, போட்டி வேட்பாளர், காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, சாதி சான்றிதழ் போலியாக சமர்ப்பித்ததற்கான உரிய பதில் அளிக்காததால், அம்மாமன்ற உறுப்பினர் பணியை செய்ய ஷாலினி வேலுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக ஷாலினி வேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம், ஷாலினி வேலு மீண்டும் 27வது வார்டு கவுன்சிலராக பணி செய்ய எந்தவித தடையும் இல்லை என உத்தரவிட்டது. அதன்படி ஷாலினி வேலு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பணி செய்வதற்கான உத்தரவு நகலுடன் ஆணையாளர் செந்தில்குமரனை நேரில் சந்தித்து, அதனை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, உயர்நீதிமன்றம் உத்தரவின்படி ஷாலினி வேலு, மீண்டும் 27வது வார்டு கவுன்சிலராக பொறுப்பேற்றார். அப்போது, உடன் பணியாற்றிய மற்ற கவுன்சிலர்கள், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

The post பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பெண் கவுன்சிலர் மீண்டும் பொறுப்பேற்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Kanchipuram ,Kanchipuram Municipal Corporation ,
× RELATED கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!