×

நீலகிரியில் நீர் பனி விழுவதால் விவசாயிகள் கவலை

 

ஊட்டி, அக்.8: ஆண்டுதோறும், அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறை பனி விழ துவங்கும். இச்சமயங்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படும். மேலும், தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறிகளும் பாதிக்கும். குறிப்பாக, பனிக்காலத்தில் தேயிலை செடிகளை அதிகளவு பாதிக்கும். இந்த பனியில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

இம்முறை மழை குறைந்த நிலையில், முன்னதாகவே நீர் பனி விழ துவங்கியுள்ளது. கடந்த இரு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்த நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் புல் வெளிகள், தேயிலை தோட்டம் மற்றும் மலர் செடிகளில் நீர் பனி கண்ணாடி இழைகள் போல் காட்சியளிக்கிறது.

முன்னதாகவே, நீர் பனி விழ துவங்கியுள்ளதால் தேயிலை விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இரு நாட்களாக குளிரும் அதிகரித்துள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் வலம் வருகின்றனர்.

The post நீலகிரியில் நீர் பனி விழுவதால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் பருவ மழை துவக்கம்...