×

நாகலூத்துமேடு பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தகனமேடை அமைக்கும் பணி: மேயர் மகாலட்சுமி ஆய்வு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், நாகலூத்துமேடு பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய தகனமேடை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் சார்பில், இறந்தவர்களின் இறுதி சடங்கிற்காக நவீன மின் தகனமேடை ஏற்கனவே தாயார்குளம் மற்றும் சர்வதீர்த்தகுளம் அருகே செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் மேலும் சின்ன காஞ்சிபுரம் 31வது வார்டு பகுதியான நாகலத்துமேடு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மக்கள் பங்களிப்புடன் கூடிய புதிய நவீன தகனமேடை அமைக்க திட்டமிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் துவக்கப்பட்டது.

இதில், பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.60 லட்சம் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் சார்பாக ரூ.1 கோடியே 40 லட்சம் என இணைந்து ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன தகனமேடை கட்டப்பட்டு வருகிறது. தற்போது, 40 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில், இதனை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், 3வது மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், பணி குழு தலைவர் சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், பூங்கொடி தசரதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகராட்சி பொறியாளர் கணேசன், முடிவுற்ற பணிகளும் இனி நடைபெற உள்ள பணிகள் குறித்து மாநகராட்சி மேயருக்கு விளக்கம் அளித்தார்.

இதனைகேட்ட மேயர் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளருக்கு அறிவுறுத்தினார். பின்னர், மேயர் மகாலட்சுமி யுவராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நவீன மின் தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் மின் தகனமேடை அருகில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு, அதனை சுற்றி நடை பாதைகள், பசுமை பூங்கா, வாகன நிறுத்துமிடம் என தனியாக பொதுமக்கள் பங்களிப்புடன் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் நிறைந்த வளாகமாக இந்த இடம் மாற்றப்பட உள்ளதாகவும், இந்த பணிகள் அனைத்தும் 2 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது’ என்றார்.

The post நாகலூத்துமேடு பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தகனமேடை அமைக்கும் பணி: மேயர் மகாலட்சுமி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nagaluthumedu ,Mayor ,Mahalakshmi ,Kanchipuram ,Kanchipuram Corporation ,Nagaloothumedu ,Dinakaran ,
× RELATED நாய் கடித்த சிறுவனிடம் நலம்...