×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை, ஏப்.17: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தொடர் அரசு அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். மேலும், தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் அமைந்ததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. அதன்படி, நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகரித்திருந்தது. மேலும், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்துச் செய்யப்பட்டது. கடுமையான கோடை வெயில் சுட்டெரிப்பதால், பக்தர்களின் தரிசன வரிசையில் தரை விரிப்புகள் போடப்பட்டிருந்தன. ஒருசில இடங்களில் நிழற்பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்களுக்கு குளிர்ந்த மோர் வழங்கப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, ஒற்றை வரிசை விரைவு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Annamalaiyar ,Temple ,Tiruvannamalai ,Thiruvannamalai Annamalaiyar ,Thiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவ...