சென்னை: பி.இ. மற்றும் பி.டெக் படிப்புக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகமும் ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நடப்பாண்டு ஆன்லைன் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உயர்கல்வித்துறை ஆணை ஒன்று பிறப்பித்தது. அதன்படி நடப்பாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்குவது முதலிய நடவடிக்கை இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நீதிபதிகள் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில், ஆண்லைன் மூலம் விண்ணப்பித்தால் கிரமப்புற மாணவர்கள், தமிழ் வழியில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த விதியை மாற்றி பல்கலை., இருந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையையும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த விசாரணையில் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.