×

தனியார் கம்பெனியில் புகுந்து திருடிய கஞ்சா குற்றவாளிகள் கைது

புதுச்சேரி, செப். 27: சேதராப்பட்டு அருகே தனியார் கம்பெனியில் புகுந்து பொருட்கள் திருடிய கஞ்சா குற்றவாளிகள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இருவரும் சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றதால் காயமடைந்து போலீசிடம் பிடிபட்டனர். புதுச்சேரி, சேதராப்பட்டு அடுத்த கரசூரில் தனியார் பேப்பர் மில் உள்ளது. இங்கு ஜெயமூர்த்தி என்பவர் (52) காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் பணியிலிருந்தபோது தனது கம்பெனி வளாகத்தில் 2 திருடர்கள் புகுந்து அங்கிருந்த விலையுயர்ந்த எக்ஸ்ட்ராஸ் பேனை திருடிச் செல்வதை பார்த்ததும் கூச்சலிட்டபடி அவர்களை வழிமறித்து பிடிக்க முயன்றுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த திருடர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த இரும்பு பைப்பால் அவரை சரமாரி தாக்கிவிட்டு மதில்சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றனர். இதனிடையே காவலாளி ஜெயமூர்த்தியின் சப்தம் கேட்டு பொதுமக்கள், அக்கம்பக்கத்தில் கம்பெனியில் வேலை செய்பவர்கள் ஓடிவந்து மதில் சுவர் ஏறி குதித்ததில் தலை, காலில் அடிபட்டு கிடந்த 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் சேதராப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். எஸ்ஐ ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அங்கிருந்த 2 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், வில்லியனூர் ராமநாதபுரம் சுபாஷ் சந்திரபோஸ் (21), தொண்டமாநத்தம் மகேந்திரன் என்ற சூர்யா (23) என்பதும், கஞ்சா வழக்கு குற்றவாளியான இருவரும் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதும் தெரியவந்தது. மேலும் மதுஅருந்த பணமில்லாததால் தனியார் பேப்பர் மில்லுக்குள் புகுந்து எக்ஸ்ட்ராஸ் மின்விசிறியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் 394 பிரிவின்கீழ் வழக்குபதிந்த சேதராப்பட்டு போலீசார், அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post தனியார் கம்பெனியில் புகுந்து திருடிய கஞ்சா குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் முழு அடைப்பு...