தஞ்சாவூர், ஏப்.6: பொதுமக்கள் அச்சமின்றி கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்ளும் வகையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நேற்று தஞ்சாவூரில் டவுன் டிஎஸ்பி ராஜா தலைமையில் நடைபெற்றது. பங்குனி மற்றும் சித்திரை மாதத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தஞ்சை மாநகரை பொருத்தவரை தஞ்சை பர்மா காலனி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் மேல வீதியில் பச்சைக்காளி பவளக்காளி வீதி உலா ஆகிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் எப்போதும் பொது மக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மக்கள் அச்சமின்றி திருவிழாக்களில் கலந்து கொள்ளலாம்.
மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவுபடி தஞ்சை நகரில் கரந்தை பகுதியில் இருந்து கொடிமரத்து மூலை, வடக்கு வீதி, மேல வீதி, சிவகங்கை பூங்கா வரை காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் தஞ்சாவூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சீருடை அணிந்து பேரணியாக சென்றனர். இதில் காவல்துறை பாதுகாப்பு வாகனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
The post தஞ்சாவூரில் போலீசார் கொடி அணி வகுப்பு: டிஎஸ்பி தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.