×

அரசு பஸ்களை மக்கள் புறக்கணித்ததன் எதிரொலி எம்டிசியின் தினசரி வருவாய் வெறும் 9 சதவீதம் மட்டுமே உயர்வு

* பல மடங்கு கட்டணம் உயர்த்தியும் பலனில்லை * அதிகாரிகள் புலம்பல்

சென்னை : பல மடங்கு கட்டணம் உயர்த்தியும் எம்டிசியின் தினசரி வருவாய் வெறும் 9 சதவீதம் மட்டுமே உயர்ந்திருப்பது அதிகாரிகளிடையே  அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை, மதுரை, சேலம், கும்பகோணம் உள்பட 7 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன.  இவை அனைத்தும் பலநூறு கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. போக்குவரத்து துறையை பொறுத்தவரை, தினமும் பணப்புழக்கம் உள்ள துறை  ஆகும். டிக்கெட் கட்டணம் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ25 முதல் 28 கோடி வரை பணம் வசூலாகிறது. இந்த பணம் அதிகாரிகளால்  முறையாக கையாளப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்பட்டால் நிர்வாகத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால், அனைத்து போக்குவரத்துக்  கழகங்களிலும் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் உள்ளது. நஷ்டத்தை சமாளிப்பதாக கூறி, கடந்த ஜனவரி மாதம் அரசு பஸ்களில்  கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. சில கி.மீ தூரம் சென்றுவர வேண்டும் என்றால் கூட, கையில் ரூ100 வரை வைத்திருக்க வேண்டிய நிலைக்கு  மக்கள் தள்ளப்பட்டனர். இதனால் கட்டண உயர்வுக்குப் பின் பயணிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் வரை சரிந்தது.

கட்டண உயர்வால் தினமும் ரூ5 முதல் அதிகபட்சம் ரூ10 கோடி வரை கூடுதல் வசூல் கிடைக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால்  மக்களின் புறக்கணிப்பால், எதிர்பார்த்த அளவு வருவாய் அதிகரிக்கவில்லை. அதன்படி, மாநிலம் முழுவதும் வெறும் ரூ1 கோடி தான் வருவாய்  அதிகரித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் உண்மையான வருவாய் எவ்வளவு என்பதை தெரிவிக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின்(எம்டிசி) வருவாய் வெறும் 9 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்  கிடைத்துள்ளது. எம்டிசி மூலம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தினமும் 3,400க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.  அதிக மக்கள் வசிக்கும் மாவட்டம் என்பதால், ஆரம்பத்தில் எம்டிசி நிர்வாகம் நல்ல லாபத்தில் இயங்கியது. ஆனால் நாளடைவில், நிர்வாக சீர்கேட்டால்  பிற போக்குவரத்துக் கழகங்களை போல் எம்டிசியும் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

கடந்த நிதியாண்டில் கூட எம்டிசி நிர்வாகம் ரூ519 கோடி நஷ்டத்தில் இயங்கியிருப்பது தெரியவந்துள்ளது. எனவே பஸ் கட்டண உயர்வின் மூலம்  எம்டிசியின் வருவாய் 50 முதல் 70 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் ரூ23.13 லட்சம் மட்டுமே வருவாய்  அதிகரித்துள்ளது. இதுகுறித்து எம்டிசி அதிகாரி ஒருவர் கூறியதாவது: எம்டிசி பஸ்களில் தினமும் சராசரியாக 48 லட்சம் பேர் பயணித்தனர். டிக்கெட்  கட்டணம் அதிகபட்சம் ரூ18 வரை உயர்த்தப்பட்டது. கடந்த டிசம்பர் வரை தினமும் ரூ2.65 கோடி வரை வருவாய் கிடைத்து வந்தது. எனவே கட்டண  உயர்வு மூலம் அதிகபட்சம் ரூ1.5 கோடி வரை வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்டண உயர்வுக்குப் பின், தினமும்  பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதனால் வருவாய் பெரிய அளவில் உயரவில்லை. நேற்று வரை உள்ள நிலவரப்படி, எம்டிசியின்  தினசரி வருவாய் ரூ2.79 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் தினசரி வருவாய் ரூ2.56 கோடியாக இருந்தது. எனவே வெறும் 9.02  சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில்...