×

‘கள்’ குடித்தபோது தகராறு வாலிபர் படுகொலை : நண்பர்கள் 2 பேர் கைது

சென்னை: செய்யூர் அருகே நண்பர்களுடன் போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். தலைறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள நெசப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (28), விவசாயி. இவரது நண்பர்கள் அதே கிராமத்தை சேர்ந்த சிவா (26), ராஜேஷ் (28), சரவணன். நேற்று மாலை 3 மணியளவில் நண்பர்கள் 4 பேரும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ‘கள்’ குடிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு மூவரும் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளனர். அப்போது, கிருஷ்ணகுமார் 3 பேரையும் கிண்டலாக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில், அது வாய் தகராறாக மாறியுள்ளது.

இதில், ஆத்திரம் அடைந்த சிவா, ராஜேஷ், சரவணன் ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த கிருஷ்ணகுமார் கீழே சரிந்தார். அப்போதும், ஆத்திரம் தீராத அவர்கள் அருகில் பனஓலை வெட்ட பயன்படும் அரிவாளை கொண்டு கிருஷ்ணகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதில், கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து செய்யூர் போலீசார் சம்பவ இடம் வந்து கிருஷ்ணகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியிருந்த சிவா மற்றும் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய சரவணனை தேடி வருகின்றனர். நண்பர்களே சக நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED 63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்