ஊட்டி : ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாள் தோறும் சுற்றுலா பயணிகள் வந்த போதிலும் விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் 3 நாட்களாக தாவரவியல், ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதுமட்டுமின்றி புத்தாண்டை கொண்டாட தற்போது சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அனைத்து சுற்றுலா தலங்களிலும் குட்டீஸ்கள் கூட்டமே அதிகமாக காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையாமல் உள்ளதாலும், தொடர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதாலும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நேற்று ஊட்டி நகரின் பல்வேறு சாலைகளிலும் வாகன நெரிசலும் காணப்பட்டது. குறிப்பாக, ஊட்டி – குன்னூர் சாலையில் லவ்டேல் சந்திப்பு முதல் சேரிங்கிராஸ் வரையிலும், ஊட்டி – மைசூர் சாலையில் ஹில்பங்க் முதல் சேரிங்கிராஸ் வரையிலும், கமர்சியல் சாலை மற்றும் தொட்டபெட்டா செல்லும் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. கடந்த இரு நாட்களாக ஊட்டியில் மோசமான காலநிலை நிலவுகிறது. எந்நேரமும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிர் நிலவுகிறது. எனினும், இதனையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகள் மற்றும் குடைகளை பிடித்தப்படியே சுற்றுலா தலங்களில் வலம் வருகின்றனர். இந்த திடீர் காலநிலை மாற்றத்தால் தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகளும் அதிகரித்துள்ளது….
The post சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு வாகன நெரிசலில் தத்தளிக்குது ஊட்டி appeared first on Dinakaran.