×

சசிகலாவுக்காக ரூ.1,600 கோடி பழைய கரன்சிகளை மாற்றிய தொழிலதிபர்கள் 14 பேரும் பினாமிகள்தான்: தனி நீதிபதி உத்தரவு சரிதான்; ஐகோர்ட் அமர்வு உத்தரவு

சென்னை: பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது ரூ.1,600 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுக்களை பயன்படுத்தி சொத்துக்களை வாங்க வி.கே.சசிகலாவுக்கு உதவ பினாமிகளாக செயல்பட்டதாக தொழிலதிபர்கள் வி.எஸ்.ஜே.தினகரன், பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை எடுத்த பினாமி சட்ட நடவடிக்கை சரிதான். மேலும், இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவும் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வி.கே.சசிகலா வீட்டில் 2017ம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அவரது பினாமிகள் வீடுகளிலும் பெரம்பூர் பகுதியை சேர்ந்த வி.எஸ்.ஜே.தினகரன் என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் ஏராளமான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஐடி சோதனையில் ரூ.1,600 கோடி பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம், பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டுள்ளதாக கூறி கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே. தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், பாலாஜி, ஓஎம்ஆர்  சாலையில் உள்ள மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. இதையடுத்து, அவர்கள் மீது பினாமி சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து வி.எஸ்.ஜே.தினகரன், பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்பட 14 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை, விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த் வருமான வரித்துறை நடவடிக்கையில் தலையிட முடியாது எனக்கூறி அனைத்து மனுகளையும தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள் பாலாஜி, உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பெற்று இடத்தை விற்பனை செய்ததாக கூறுவது தவறு. ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடத்தை விற்பனை செய்துள்ளோம். அதனால், எங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தை பயன்படுத்த முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியுள்ளனர். இந்த சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்தது. ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை, வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, அவர்கள் மீது பினாமி சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்த சரிதான் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட, நீதிபதிகள், மனுதாரர்களுக்கு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய சட்டத்தில் உள்ள அனைத்து வாயப்புகளும் தரப்பட்டுள்ளது. அதன் பிறகே வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தனி நீதிபதியும் உறுதி செய்துள்ளார். தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட போதுமான காரணங்கள் இல்லை. எனவே இந்த மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர். மனுதாரர்களுக்கு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய சட்டத்தில் உள்ள அனைத்து வாயப்புகளும் தரப்பட்டுள்ளது. அதன்பிறகே வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட போதுமான காரணங்கள் இல்லை….

The post சசிகலாவுக்காக ரூ.1,600 கோடி பழைய கரன்சிகளை மாற்றிய தொழிலதிபர்கள் 14 பேரும் பினாமிகள்தான்: தனி நீதிபதி உத்தரவு சரிதான்; ஐகோர்ட் அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sasikala ,CHENNAI ,VK Sasikala ,Dinakaran ,
× RELATED பிரிந்துக் கிடக்கும் தொண்டர்களை...