சென்னை: குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுக எம்.எல்.ஏ. ஜெ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதற்காக 55 கோடி ரூபாய் வரை ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால் அதுகுறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குட்கா கடன் உரிமையாளர் ரூ.56 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்ததை விசாரணையில் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுவாழ்க்கையில் இருப்பவர்களை நோக்கி அவதூறுகள் வரத்தான் செய்யும் என்று தெரிவித்தார். மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை என்று குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை குறித்த கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக டி.ஜி.பி சந்திப்பு
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை, டி.கே.ராஜேந்திரன் சந்தித்து வருகிறார். குட்கா வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில் திடீர் சந்திப்பு நடைபெற்றது.