மயிலாடுதுறை,டிச.1: மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “சட்டமன்ற நாயகர் கலைஞர்\” கருத்தரங்கில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கலந்து கொண்டு கருத்தரங்கில் வெற்றி பெற்ற பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு எம்பி ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் தெரிவித்ததாவது:
இன்றைக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த கருத்தரங்கம் பல்வேறு மாவட்டங்களிலேயே நடைபெறும் வேளையில், இங்கும் மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. தனியார் பள்ளிகளில் தான் திறமையான மாணவர்கள் இருப்பார்கள் என்ற நிலை மாறி இப்படிப்பட்ட நகராட்சி பள்ளிகளிலும் அதைவிட மிகத்திறமையான மாணவர்கள் இருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கின்ற வகையில் தான் இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இந்த பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை எடுத்து வருகிறார். அதிலே ஒன்றாக தான் ஒவ்வொரு பள்ளியிலும் கலைத்திருவிழா நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்படி இந்த ஆண்டு நடைபெற்ற கலைத்திருவிழாவில் ஒரு மாணவி மிக சிறப்பாகபாடி இன்றைக்கு சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து சென்றிருக்கிறார். இந்த ஒரு சிறு வயதிலேயே அந்த மாணவிக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறதென்றால் அதற்கு காரணம் நம் தமிழ்நாடு முதலமைச்சர்.
இந்தியாவில் இரண்டாவது இடத்தில் கல்வி கற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பெண்கள் அனைத்துத் துறையிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் கான பல திட்டங்கள் உருவாக்கி சிறப்பு செய்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ரவிசந்திரன், தமிழ்நாடு அரசு சட்டமன்ற சட்டப்பேரவை கூடுதல் செயலர் துணைச்செயலாளர் பெர்லின்ரூப்குமார், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, நகராட்சித்தலைவர் செல்வராஜ். உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post கூட்டுறவு சங்க கட்டிடம் திறப்பு விழா இந்தியாவில் கல்வி கற்ற மாநிலத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் திகழ்கிறது appeared first on Dinakaran.