×

கூடுதலாக அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் நடவடிக்கை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை, அக்.26: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கூடுதலான இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் ெபாருத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் 7ம் நாளன்று மகா தேரோட்டமும், நிறைவாக மகாதீபப் பெருவிழாவும் நடைபெற உள்ளது. அதையொட்டி, தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மாடவீதியில் பவனி வரும் பஞ்ச ரதங்கள் சீரமைப்பு, சுவாமி திருவீதியுலா வாகனங்கள் பழுது நீக்கி தயார்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவில் சுமார் 34 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக கணக்கிடப்பட்டது. எனவே, இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக அதிகபட்சம் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வெளிமாநில பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், அதற்கு தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பக்தர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதையொட்டி, அண்ணாலையார் கோயில் உள் பிரகாரங்கள், வெளி பிரகாரம், மாடவீதிகள், கிரிவலப்பாதை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதன்படி, கோயில் கோபுர நுழைவு வாயில்கள், சன்னதி நுழைவு வாயில்கள், வடக்கு மற்றும் தெற்கு ஒத்தைவாைட தெரு, ராஜகோபுரம் எதிர்புறம் உள்ளிட்ட மொத்தம் 39 இடங்களில் அதிநவீன ஐபி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளன. அதேபோல், சுவாமி திருவீதியுலா நடைபெறும் மாடவீதியில் 11 இடங்களில் தற்காலிகமாக 360 டிகிரியில் சுழலும் 15 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், சுவாமி அலங்காரம் நடைபெறும் திருக்கல்யாண மண்டபத்தில் 14 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் 163 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

மேலும், இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து கண்காணிக்க வசதியாக, அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சக்தி விலாச மண்டபத்திலும், டவுன் போலீஸ் ஸ்டேஷனிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுகிறது. அதோடு, காவல்துறை மற்றும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களில் இருந்து கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதற்கான பணிகள் இன்னும் சில நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமராக்களில் பயன்பாடுகளை வரும் 28ம் தேதி பவுர்ணமி தினத்தன்று சோதனை ஓட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

The post கூடுதலாக அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் நடவடிக்கை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Tiruvannamalai ,Karthika Deepatri festival ,Annamalaiyar ,Kartika Deepatri festival ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத்...