×

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ளூர் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்

கூடங்குளம்,செப்.30: கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ளூர் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என கூடங்குளத்தில் நடந்த திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேசினார்.

கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் ரோகினி திடலில் திமுக பவள விழாவை கொண்டாடும் விதமாக நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் திமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேசுகையில், ‘கூடங்குளம் அணுமின் நிலைய சி பிரிவு பணியிடங்களில் கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு நிலம் கொடுத்த குடும்பத்தில் உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் எனது குரலை பதிவு செய்வேன். திமுக அரசு ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. மகளிருக்கு ₹1000 உரிமைத்தொகை, அரசு பஸ்சில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன’ என்றார்.

பொதுக்கூட்டத்துக்கு ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன், கூடங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வின்சி மணியரசு, மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் ஆனந்த், கூடங்குளம் கிளைச்செயலாளர் பாலசுப்பிரமணியன், காந்திநகர் கிளைச்செயலாளர் பரமதாஸ், எஸ்.எஸ்.புரம் கிளைச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் வள்ளியூர் ஒன்றிய பெருந்தலைவர் ராஜா ஞான திரவியம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், சித்திக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. நேற்று மாலை பவள விழா கொடி கம்பத்தில் தி.மு.க கொடியினை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தின் முன்புள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் பல்வேறு மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஒன்றிய பெருந்தலைவர்கள், நகர்மன்ற மற்றும் பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ராதாபுரம் ஒன்றிய கழக நிர்வாகிகள், கூடங்குளம் தொழிலதிபர்கள் ரத்தினசாமி, ஆண்ட்ரூஸ் நவமணி, ஜெயக்குமார், திமுக நிர்வாகிகள் நேசராஜ், தாமஸ், ஜெயக்குமார், கணேசன், அரசு ஒப்பந்தகாரர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ளூர் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Kudankulam Nuclear Power Plant ,Kudankulam ,Tamilachi Thangapandian ,DMK coral festival ,Kudankulam nuclear power ,Rohini Thidal ,Kudankulam Panchayat Office ,Dinakaran ,
× RELATED வரன்முறை செய்யாத மனைகளுக்கு குடிநீர் இணைப்பு மாநகராட்சி மேயர் அறிவிப்பு