×

காலாப்பட்டு அருகே வழிப்பறி கும்பலை சேர்ந்த 2 பேர் கத்தியுடன் அதிரடி கைது

 

காலாப்பட்டு, ஜூலை 24: காலாப்பட்டு அருகே வழிப்பறி கும்பலை சேர்ந்த 2 பேரை கத்தியுடன் போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 3 கூட்டாளிகளை தேடி வருகின்றனர். புதுச்சேரி காலாப்பட்டு அடுத்த தமிழகப் பகுதியான கீழ்புத்துப்பட்டு மஞ்சளீஸ்வர அய்யனாரப்பன் கோயில் அருகே, திண்டிவனம் செல்லும் சாலையில் கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 5 பேர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

போலீசார் விரட்டிச்சென்று 2 பேரை மடக்கிப் பிடித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த அஜித் (22), அவரது நண்பர் மணி (22) என்பதும், தப்பியோடிய 3 பேரும் அவர்களது கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது. திண்டிவனம் சாலையில் வாகனங்களில் செல்பவர்களை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தியை கைப்பற்றினர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post காலாப்பட்டு அருகே வழிப்பறி கும்பலை சேர்ந்த 2 பேர் கத்தியுடன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Kalapattu ,Dinakaran ,
× RELATED பொருட்களை திருட முயன்ற மர்ம நபர் கீழே விழுந்து சாவு