×

கரூரில் நள்ளிரவு குடிநீர் விநியோகம் முறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

 

கரூர், நவ. 26: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் நள்ளிரவில் குடிநீர் விநியோகம் செய்வதால் பெரும்பாலான மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கரூர் மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் காவிரி ஆறு பயணிக்கும் நெரூர், வாங்கல் மற்றும் கட்டளை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஒரு சில பகுதிகளில் பகல் நேரங்களிலும், சில பகுதிகளில் நள்ளிரவிலும் சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கரூர் நகரம் தொழில் நகரம் என்பதால் பெரும்பாலானோர் வேலைக்கு சென்று விடுகின்றனர். இந்நிலையில், இவர்கள் வீடு திரும்பி தூங்கிக் கொண்டிருக்கும் போது, தண்ணீர் குழாய்களில் விநியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதி குடியிருப்புகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டி வசதி இல்லை.

இதனால், விநியோகம் செய்யப்படும் தண்ணீரை பிடித்து பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில், குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் தாந்தோணிமலை போன்ற சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் மக்கள் அதிகளவு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

The post கரூரில் நள்ளிரவு குடிநீர் விநியோகம் முறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur Corporation ,
× RELATED சாலைகளில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்ல கூடாது