குடியாத்தம்: குடியாத்தம் அருகே இயந்திர கோளாறு காரணமாக ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் திடீரென வயலில் தரையிறங்கியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த குளிதிகை பாலாற்றை ஒட்டியுள்ள வயலில் நேற்று மதியம் 2 மணியளவில் பெங்களூரில் இருந்து சென்னை சென்ற ஐஏ 2123 என்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக பதற்றத்துடன் அங்கு குவிந்தனர். தகவல் அறிந்த மேல்பாடி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பெங்களூரிலிருந்து சென்னைக்கு ராணுவ ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் கர்னல் அட்சிய காளியா, துணை கமாண்டோ புனித் ஆகிய இரு அதிகாரிகளும், 2 பைலட்களும் வந்துள்ளனர். இயந்திர கோளாறு காரணமாகவும், ஆயில் தீர்ந்துவிட்டதாலும் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாமல் தரையிறக்கி உள்ளனர் என்று தெரியவந்தது. பின்னர், பெங்களூரில் உள்ள ராணுவ விமான தளத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக பெங்களூரில் இருந்து மற்றொரு ஐஏ 2122 ராணுவ ஹெலிகாப்டரில் விமான தொழில்நுட்ப வல்லுனர்கள் 4 பேர் மாலை 4.30 மணியளவில் வந்து தரையிறங்கினர். அவர்கள் எடுத்து வந்த 25 லிட்டர் ஆயிலை ஊற்றினர். மாலை 5 மணியளவில் ெஹலிகாப்டரில் பழுதை நீக்கினர். இருப்பினும் அந்த ஹெலிகாப்டர் பெங்களூருக்கு திரும்பி சென்றது. இதனால் அதில் இருந்த முக்கிய பைல்களை பழுதை நீக்க வந்த ஹெலிகாப்டருக்கு மாற்றினர். பின்னர் அந்த ஹெலிகாப்டர் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.