மேட்டூர், ஜூலை 1: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கருமலைக்கூடல் மயானத்தில் எரிந்து கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, கருமலைக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலம் முழுவதும் கருகிய நிலையில் காணப்பட்டது. அருகில் மஞ்சப்பை ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றி பரிசோதித்து பார்த்ததில் ஆதார் அட்டை ஒன்று இருந்தது. அதில், சேலம் மாவட்டம் பெரியபுத்தூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த கணேசன்(60) என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் கருகி கிடந்தவரின் அருகில், ஒரு லிட்டர் பெட்ரோல் கேன் இருந்தது. எனவே, குடும்பத் தகராறு காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் தீ வைத்து எரித்து கொலை செய்து விட்டு, சடலத்தை மயானத்தில் வீசி விட்டு சென்றனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.
