×

உலக முதலீட்டாளர் மாநாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலமாக நகரின் பல்வேறு பகுதிகளில் ஒளிபரப்பு

 

ஈரோடு,ஜன.8:சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டு நிகழ்ச்சி ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஜனவரி 7, 8ம் தேதி என 2 நாட்கள் சென்னையில் உள்ள நந்தனம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கண்காட்சி, கருத்தரங்கம், வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் சந்திப்பு கூட்டங்கள் நடைபெறுகின்றன.

மேலும் தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான இம்மாநாட்டின் நிகழ்வுகளை மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தெரிந்துக் கொண்டு பயன்பெறும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் காணொலி மூலாக காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.இதனை, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுனகரா ஈரோடு மாவட்ட தொழில்துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் பார்வையிட்டனர்.

மேலும், ஈரோடு மாவட்ட செய்தி – மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலமாக,ஈரோடு பேருந்து நிலையம், ஈரோடு அரசு கலை, அறிவியல் கல்லூரி, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளிலும்,பள்ளிகளிலும், மாவட்டத் தொழில் மையம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் ஆகிய இடங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொழில்துறையினர், தொழில் முனைவோர்கள், மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

The post உலக முதலீட்டாளர் மாநாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலமாக நகரின் பல்வேறு பகுதிகளில் ஒளிபரப்பு appeared first on Dinakaran.

Tags : Global Investors Conference ,Erode ,Chennai ,World Investors Conference 2024 ,Nandanam Trade Center ,World Investors Conference ,Public Relations Department ,
× RELATED ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து