×

உத்திரமேரூர் அருகே தனியார் கம்பெனி வேன் ஏரியில் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உட்பட 14 பேர் காயம்

 

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பொற்பந்தல் கிராமத்தில் தனியார் கம்பெனி வேன் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் உட்பட 14 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட இடையம்புதூர் கிராமத்திலிருந்து படப்பை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றுச் செல்லும் வேன் ஒன்று நேற்று காலை இடையம்புதூர் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. இதில் இடையம்புதூர், சாலவாக்கம், அண்ணாத்தூர், சித்தன்னக்காவூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 13 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் படப்பை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது வேன் பொற்பந்தல் கிராம ஏரிக்கரை சாலையில் சென்ற கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி சாலையோர ஏரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் சிவானந்தம் (27), ஊழியர்கள் அல்மாபேகம் (49), ஏகவதி (45), சீனிவாசன் (35), முத்துலட்சுமி (36), நிவேதா (26), சத்யா (25), ராமராஜன் (30) உட்பட 14 பேரும் சிறு சிறு காயங்களோடு உயிர் தப்பினர். தகவல் அறிந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உத்திரமேரூர் அருகே தனியார் கம்பெனி வேன் ஏரியில் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உட்பட 14 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,Polpanthal ,Uttara Merur ,Dinakaran ,
× RELATED எலிக்காக வைத்திருந்த மின்வேலியில் சிக்கி மூதாட்டி பலி: ஒருவர் கைது