×

இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக வாளுடன் ரகளை செய்த 2 வாலிபர்கள் கைது

மதுரை, செப். 30: மதுரை, கூடல்புதூர் ரெயிலார் நகரில் பொதிகை மாரியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே காலி இடத்தில் இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டு கையில் வாளுடன் ரகளை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ரகளை செய்ய மற்றொருவரை செல்போனில் படமெடுத்துக்கொண்டிருந்தார். இது போல் ஒருவர் மாற்றி ஒருவர் ரகளை செய்வதும், அதனை செல்போனில் பதிவு செய்வதுமாக இருந்தனர்.அந்தப்பகுதியில் பொதுமக்களை நடமாட விடாமல் மிரட்டிக் கொண்டும் இருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கூடல் புதூர் எஸ்.ஐ விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் இருவரையும் பிடித்தனர். அவர்களிடமிருந்து வாள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அவர்கள் ரயிலார் நகர் ஆறாவது தெரு ராஜா(21), பைபாஸ் ரோடு திருவள்ளுவர் காலனி சிவா (29) என தெரியவந்தது. மேலும், இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக இருவரும் ரகளை செய்வதுபோல் வீடியோ எடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

The post இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக வாளுடன் ரகளை செய்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Potikai ,Mariamman Temple ,Kudalputur Railar Nagar, Madurai ,Dinakaran ,
× RELATED பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?