ஈரோடு, நவ.26: திருக்கார்த்திகை விழாவையொட்டி ஈரோட்டில் அகல் விளக்குகள் விற்பனை நேற்று அமோகமாக நடைபெற்றது. திருக்கார்த்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வீடுகள், கடைகள், அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். வீடுகளுக்கு, முன்பு வீதியில் வண்ண கோலமிட்டும் அதில் பெண்கள் அகல் விளக்குகளை ஏற்றுவார்கள். இதையடுத்து, ஈரோட்டில் நேற்று அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
கடந்த சில மாதங்களாக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. இந்த அகல் விளக்குகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை, மணிக்கூண்டு பகுதி, கொல்லம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சாலையோரமாக மண்ணாலான அகல் விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
ஒரு விளக்கு ரூ.1.50க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய விளக்குகள் ரூ.10க்கு 3 விளக்குகள் அல்லது 4 விளக்குகள் என்று விற்பனை செய்யப்பட்டது. 5 முக விளக்குகள், மூடியுடன் கூடிய அணையாத விளக்குகள், குத்துவிளக்கு வடிவிலான அகல் விளக்குகள், வண்ணங்கள் பூசப்பட்ட விளக்குகள் என ஏராளமான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. விளக்குகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
The post இன்று திருக்கார்த்திகை விற்பனைக்கு குவிந்த அகல் விளக்குகள் appeared first on Dinakaran.