×

இடைநிலை ஆசிரியர்கள் 18வது நாளாக ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி, மார்ச் 8: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள், 18-வது நாளாக நேற்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3 ஆயிரத்து 170 குறைந்துள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.  நீலகிரி மாவட்டத்திலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் தொடர்ந்து இடை நிலை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 18-வது நாளாக நேற்றும் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் தண்டபாணி, பொருளாளர் அருண்பிரபு, மகளிர் அணி நிர்வாகி சித்ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

The post இடைநிலை ஆசிரியர்கள் 18வது நாளாக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஊட்டி ரோஜா பூங்கா சாலையோரங்களில் ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை