×

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு

திருவாரூர், ஜுன் 18: திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வியாபாரிகளை தடுக்கும் வகையில் பயோ மெட்ரிக் முறையினை விவசாயிகள் பயன்படுத்துமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் 2022-23ம் ஆண்டு பருவத்தில் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளை தடுக்கும் வகையில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை அனைத்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதைமுன்னிட்டு, மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு 115 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3ம் கோடை பருவம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுவருவதுடன் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தேவையான இடங்களில் கூடுதலான அளவில் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனைக்காக பதிவு செய்யும் போது பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறையினை பின்பற்றி நெல் விற்பனை செய்யலாம்.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல்வியாபாரிகள் உள்நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல்லை காலதாமதமின்றி உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யமுடியும். பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் கைபேசி எண்ணிற்கு ஓடிபி எண் பெறுவதன் மூலமும் விவசாயிகளின் விவரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவுமூலம் விவசாயிகளின் சுயவிவரங்கள் சரியாக உள்ளதா என்பதை கொள்முதல் நிலையங்களிலே சரிபார்த்துக்கொண்டு நெல்லினை விற்பனை செய்து பயன்பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு appeared first on Dinakaran.

Tags : Paddy Procurement ,Tiruvarur ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த...