×

அரசு திட்டம் உரிய காலத்திற்குள் நிறைவேற்ற அனைத்து துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவாரூர், ஆக. 24: திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் அரசு போக்குவரத்துதுறை ஆணையருமான நிர்மல்ராஜ் தலைமையிலும், கலெக்டர் சாரு முன்னிலையிலும் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டமானது நடைபெற்றது. இதில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் கூறியதாவது, தமிழகஅரசின் ஆணைகிணங்க திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நமக்கு நாமேதிட்டம், கலைஞரின் நகர்புற மேம்பாட்டுதிட்டம், மழைநீர் சேகரிப்பு, வருவாய் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள், பள்ளிகல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும், எழுத்தும் திட்டம், பள்ளிகட்டமைப்புகள், சாலை விரிவாக்கபணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வுமேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வின் அடிப்படையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ சண்முகநாதன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்திரா, ஆர்.டி.ஓக்கள் சங்கீதா, கீர்த்தனாமணி, கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு திட்டம் உரிய காலத்திற்குள் நிறைவேற்ற அனைத்து துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த...