சென்னை: உயர்கல்வி ஆணையம் சட்டம் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. அரசு பல்கலைக்கழகங்களுக்கு வளர்ச்சி, ஆராய்ச்சி நிதி வழங்கும் அதிகாரம் பெற்ற மத்திய அரசு அமைப்புகளில் ஒன்று பல்கலைக்கழக மானிய குழு. இந்நிலையில் பல்கலைக்கழக மானிய குழுவை கலைத்து விட்டு, உயர்கல்வி ஆணையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உயர்கல்வி ஆணைய சட்டம் 2018 உருவாக்கியுள்ளது. இதையடுத்து, உயர்கல்வி ஆணைய சட்டம் 2018 ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர கே.பி.அன்பழகன், அரசு உயரதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால் உயர்கல்வித்துறையின்கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விரைவில் தமிழக அரசு சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கருத்துரு அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடைேய, தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தில் 13 அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஆய்வுக்கூட்டமும் நேற்று நடந்தது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால்,கலந்துகொண்டு பல்கலைக்கழக செயல்பாடு, புதிய சட்ட மசோதா தொடர்பாக விவாதித்தனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
