×

அண்ணா, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி; கலெக்டர் தகவல்

திருவள்ளூர் : கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மற்றும் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 17ம் தேதி ஆகிய நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி திருவள்ளுர் கலெக்டர் அலுவல கூட்ட அரங்கு 2ல் நடைபெறவுள்ளது. அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள், `தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன்’, `மாணவர்க்கு அண்ணா’,`அண்ணாவின் மேடை தமிழ்’,`அண்ணா வழியில் அயராது உழைப்போம்’மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு `பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்’,`பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள்’,`அண்ணாவின் தமிழ் வளம்’,`அண்ணாவின் அடிச்சுவட்டில்’,`தம்பி மக்களிடம் செல்’ஆகிய தலைப்புகளில் போட்டி நடைபெறுகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெரியார் பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள், `தொண்டு செய்து பழுத்த பழம்’,`தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்’, `தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்’,`தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம்’,`தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்’மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு `தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்’,`தந்தை பெரியாரும் மூட நம்பிக்கை ஒழிப்பும்’,`பெண் ஏன் அடிமையானாள்’,`இனிவரும் உலகம்’,`சமுதாய விஞ்ஞானி பெரியார்’,`உலகச்சிந்தனையாளர்களும் பெரியாரும்’ஆகிய தலைப்புகளில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெறும் பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.3 ஆயிரம்,  3ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். பள்ளி போட்டியானது முற்பகல் 10 மணிக்கும், கல்லூரி போட்டி பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இயக்குநர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும் பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

The post அண்ணா, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி; கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Anna ,Periyar ,Thiruvallur ,Alby John Varghese ,Tamil Development Department ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு